செங்கல்பட்டு புதிய மாவட்டம் அமைவதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக செங்கல்பட்டுக்கு வருகை தந்த தனி அலுவலர் பல்வேறு இடங்களில் ஆய்வு
மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்படும் என்று அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, மாவட்டம் பிரிப்பது தொடர்பாக மக்களின் கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்த முடிவு செய்த மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, கூட்டம் நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யுமாறு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் செங்கல்பட்டுக்கு திங்கள்கிழமை வருகை புரிந்த மாவட்ட தனி அலுவலர் ஜான்லூயிஸ், கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் சங்கர் மற்றும் தனி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை தனி மாவட்ட அலுவலர், கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் சங்கர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதற்கான இடங்களை ஆய்வு செய்தார்.
அதன்படி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி வளாகம், வேதநாராயணபுரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி, வல்லம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கருத்துக்கணிப்பு கூட்டம் நடத்துவதற்கான இடவசதி உள்ளிட் டஅடைப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வரும் ஆக. 19, 20-ஆம் தேதிகளில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.