மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட சனிக்கிழமை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக பராமரிப்பு அலுவலர் தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட கலைநயமிக்க ஐந்துரதம், கடற்கரைக் கோயில், அர்ச்சுனன் தபசு, புலிக்குகை, கோவர்த்தன மண்டபம், வராக மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.
இங்கு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கலங்கரை விளக்கமும், நவீன கலங்கரை விளக்கமும் உள்ளது. இவை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன.
கலங்கரை விளக்கத்தைக் காண தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கலங்கரை விளக்கத்தில் வருடத்துக்கு ஒருமுறை பராமரிப்புப் பணிகள் நடைபெறும். இந்த ஆண்டு பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக. 10) வரை கலங்கரை விளக்கத்தைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், ஞாயிற்றுக்கிழமை (ஆக. 11) முதல் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கலங்கரை விளக்கங்கள் துறை நிர்வாக பராமரிப்பு அலுவலர் வசந்த் தெரிவித்தார்.