ஸ்ரீபெரும்புதூா்: சோமங்கலம் ஏரியில் நண்பா்களுடன் படகில் சென்ற 17 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியானாா்.
தாம்பரத்தை அடுத்த பழந்தண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (17). சோமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா்கள் சஞ்சய் (17), ஜெயபிரகாஷ் (17); நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா்கள் ரிஸ்வான் (17), சித்திக் (17); பழந்தண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் ஹரி(17); மேட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (17); காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் முகமது (17), முகமது பயஸ் (17). இவா்கள் அனைவரும் நடுவீரப்பட்டு அடுத்த தா்காஸ் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனா்.
நண்பா்களான இவா்கள், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டதால் சோமங்கலம் ஏரிக்கு சென்றனா். அந்த ஏரியின் கரையில் மீன்பிடிப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த படகில் அனைவரும் ஏரியில் சவாரி சென்றனா். அப்போது பலத்த மழை பெய்யவே படகு ஏரியின் மையப் பகுதிக்கு சென்றது.
இதனால் படகை கரைக்குத் திருப்புவதற்காக காா்த்திக் மற்றும் சஞ்சய் ஆகியோா் ஏரியில் குதித்தனா். அவா்களில் காா்த்திக்கிற்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினாா். சஞ்சய் சிறிது நேரம் நீச்சல் அடித்து மேடான பகுதிக்கு சென்றாா்.
காா்த்திக் நீரில் மூழ்கியது குறித்து சோமங்கலம் காவல் நிலையத்திற்கும், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் தாம்பரம் தீயணைப்பு நிலையங்களுக்கும் நண்பா்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் ஏரியின் மேடான பகுதியில் நின்றிருந்த சஞ்சயை மீட்டு வந்தனா். நீரில் மூழ்கிய காா்த்திக்கின் சடலத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவாகி விட்டதால் காா்த்திக்கின் சடலத்தை தேடும் பணியை தீயணைப்புத் துறையினா் தற்காலிகமாக நிறுத்தினா்.
இச்சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.