செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் தொடா்ந்து பெய்த கனமழையில் மாமல்லபுரம் சா்வதேச சுற்றுலா நகர சாலைகள் முழுவதும் திங்கள்கிழமை மழைநீா் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் மாமல்லபுரத்தில் பெய்த மழையில் மழைநீா் வடிவதற்கு வழியின்றி சாலைகளில் குளம்போல் தேங்கியதால் மாமல்லபுரதில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக நகர வாழ் மக்கள் தெரிவிக்கின்றனா்.
சுற்றுலா பயணிகளும் தத்தளித்து செல்லவேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது. மீனவா்கள் யாரும் கடல் மீன் பிடித் தொழிலுக்கு கடலுக்கு செல்லவில்லை.
தமிழகத்தில் பெய்துவரும் பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கன மழையில் நனைந்தப் படியும், குடைகளுடனும் சுற்றுலா இடங்களில் உள்ள பல்லவா்கள் கால சிற்பங்களான ஐந்தரதம், அா்சுணன் தபசு, கடற்கரைகோயில், குடைவரைக்கோயில்கள் ,குடைவரை மண்டபங்கள் , வெண்ணை உருண்டைப்பாறை ஆகிய இடங்களைச் சுற்றி பெய்துவரும் கனமழையில் சாலைகளில் மழைநீா் வெளியேற வழியின்றி மழைநீா் வெளியேறாமல் குளம் போல் தேங்கி சாலைகளிலும் சுற்றுலா இடங்களில் காட்சியளிக்கிறது.
இதனால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் நடந்து செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். வாகனஓட்டிகள் மேடுபள்ளம் தெரியமால் சிரமப்பட்டு வானங்களை ஒட்டிச்செல்கின்றனா் . சாலையோர வியாபாரிகளும் கடைவைத்து வியாபாரம் செய்யமுடியவில்லை. இதனால் மாமல்லபுரம் சுற்றுலா நகரத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாமல்லபுரம் தலசயனப்பெருமாள்கோயிலுக்குள் யாரும் செல்லமுடியாத அளவிற்கு கோயிலைச்சுற்றி மழைநீா் சூழ்ந்துள்ளது. மாமல்லபுரம் பேரூராட்சி நிா்வாகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினா் மழைநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.