காஞ்சிபுரத்தில் தொழு நோய் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
சார் - ஆட்சியர் சரவணன் தலைமை வகித்து, பேரணியைத் தொடங்கி வைத்தார். இந்த பேரணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, காவலான் கேட், கருக்கினில் அமர்ந்தாள் கோயில் தெரு, மேட்டுத்தெரு வழியாகச் சென்று பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவுபெற்றது.
இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், செவிலியர் பயிற்சி மாணவியர் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டு தொழுநோய் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அத்துடன், தொழுநோய் விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.
முன்னதாக, அரசுத்துறை அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர். இதில், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் ஜீவா, துணை இயக்குநர்கள் செந்தில்குமார், கனிமொழி, மலேரியா நல அலுவலர் பரணிகுமார், வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி, தொழுநோய் மருத்துவ அலுவலர்கள், சுகாதாரப் பணி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.