பிரதம மந்திரியின் சம்மான் நிதித் திட்டத்தில் பெயர் விடுபட்டவர்கள் செவ்வாய்க்கிழமை (பிப்.19) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி சம்மான் நிதித் திட்டம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த சிறு, குறு விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. இத் தொகையை மூன்று தவணைகளாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி, தகுதி வாய்ந்த சிறு, குறு விவசாயிகளின் பட்டியல் தற்போது விவசாயிகளின் பார்வைக்காக கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், விடுபட்ட தகுதி வாய்ந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமைக்குள் (பிப். 19) தங்களது ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். அத்துடன், சுய உறுதிமொழி கையொப்பமிட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்துக்கு, பட்டா, ஆதார், குடும்ப அட்டை நகல்கள், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு நகல், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை சமர்ப்பித்தல் அவசியமானது என மாவட்ட ஆட்சியர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.