மதுராந்தகம் அருகே பூச்சி மருந்து கலந்து வைக்கப்பட்ட தர்பூசணி பழத் துண்டுகளை சாப்பிட்ட 3 குழந்தைகள் மயக்கமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
மதுராந்தகத்தை அடுத்த நெற்குன்றம்-வயலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகள் வள்ளி (9). அதே பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் மகள் ஐஸ்வர்யா (4), மகன் தஷ்வந்த் (2). இவர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை அருகில் உள்ள வயல்வெளியில் விளையாடச் சென்றனர். அப்போது வயல்வெளியில் கொக்குகளைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்து கலந்த தர்பூசணி பழத் துண்டுகளை 3 குழந்தைகளும் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், அனைவரும் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். இதுபற்றி தகவலறிந்த பெற்றோர் குழந்தைகள் மூவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.