மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் தெப்போற்சவம்
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலின் மாசி மக தெப்போற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
புராணத்திலும், ஆன்மிக வரலாற்றிலும் சிறப்பிடம் பெற்ற முக்கிய வைணவ கோயிலாக மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் திகழ்கிறது. மாசி மகத்தை முன்னிட்டு இக்கோயில் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகர பெருமாள் உற்சவர் சிலைகளுக்கு திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் மேளதாளம் முழங்க, வாணவேடிக்கைகளுடன், சுவாமி திருவீதி உலா வந்தார். இரவு திருக்குளத்தில் உற்சவர் எழுந்தருளி, தெப்போற்சவத்தில் மூன்று முறை வலம் வந்ததை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் தியாகராஜன் (பொறுப்பு), கோயில் பணியாளர் வீரராகவன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.