சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிருக்கான 3 நாள் விளையாட்டுப் போட்டிகள் செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கின.
சென்னை மண்டல அளவில் 14 தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவியர் பங்கேற்கும் இந்த விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும். இதில், முதல் நாள் போட்டிகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். செங்கல்பட்டு அரசினர் தொழிற் பயிற்சிப் பள்ளி துணை இயக்குநர் ஜி.விஜயமாலா வரவேற்றார். கூடுதல் இயக்குநர் சி.ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். சென்னை மண்டல பயிற்சி இணை இயக்குநர் ஆர்.மகேஸ்வரன், மறைமலைநகர் ஐஎம்சி ரிங்ஸ் தனியார் நிறுவனத் தலைவர் ராஜமாணிக்கம், கிண்டி அரசு தொழில் பயிற்சி (பொறுப்பு) துணை இயக்குநர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உதவி இயக்குநருமான எம்.சேகர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினர்.
இதுகுறித்து செங்கல்பட்டு ஐடிஐ கல்லூரி துணை இயக்குநரும் முதல்வருமான விஜயமாலா செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை மண்டலத்துக்கு உள்பட்ட அனைத்து தொழிற்பயிற்சி கல்லூரிகளிடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவெடுத்து அரசாணை 170-இன் படி
கடந்த ஆண்டு நவம்பர் 26-இல் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, நடைபெறும் இந்த 3 நாள் போட்டியில் சென்னை மண்டலத்துக்கு உள்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 14 தொழிற்பயிற்சிக் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
இதில் கால்பந்து, வாலிபால், பேட்மின்டன், 100, 200, 400 மீட்டருக்கான தடகளப் போட்டிகள், நீளம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இந்த மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் முதல் முறையாக செங்கல்பட்டு ஐடிஐயில் நடைபெறுகிறது. முதல் நாளான வியாழக்கிழமை 550-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். அன்றன்று நடக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசுகள் அன்றைய தினமே வழங்கப்படும். வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருதினங்களும் ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. சனிக்கிழமை ஒருநாள் மட்டும் பெண்களுக்கான விளையாட்டுப்போட்டி நடைபெறவுள்ளது என அவர் தெரிவித்தார்.