அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் குற்றவியல் நடவடிக்கை

அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பா.பொன்னையா கூறினார். 
அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் குற்றவியல் நடவடிக்கை


அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பா.பொன்னையா கூறினார். 
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்தார்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சார்-ஆட்சியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இக்கூட்டத்தில், ஆட்சியர் பேசியது: விளம்பர பேனர்கள் வைப்பது குறித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பேனர்கள், தட்டிகள் தொடர்பாக பொதுமக்கள் பெருநகராட்சிக்கு 1913 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். 
அதேபோல், 9943907778 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி விதிகளுக்கு புறம்பாக வைக்கப்படும் விளம்பர பேனர்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளருக்கு சட்டப்படி ரூ.5 ஆயிரம் அபராதம் (அ) ஓராண்டு சிறைத் தண்டனை (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றார். 
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், நேர்முக உதவியாளர் நாராயணன், நகராட்சி மண்டலப் பொறியாளர் முருகேசன், அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூரில்...
 பொது இடங்களில் விளம்பரப் பலகைகள் வைப்பது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசுமதி, சீதா.சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். 
இதேபோல், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சந்திரபாபு ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாமல்லபுரத்தில்...
மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,  சுகாதார ஆய்வாளர் ஸ்ரீதர், மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கட்சி சார்பில் விளம்பரப் பதாகை வைப்பவர்கள் முறையாக உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வைக்கவேண்டும் என இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. 
 இதில், அனைத்துக் கட்சி பிரமுகர்கள், சமூக நல அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com