மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
கும்பகோணம் அருகே ராஜமன்னார்குடியைச் சேர்ந்தவர் குணசேகரன். அவரது மனைவி பத்மாவதி (58), மகன் மணிகண்டன் (25), மருமகன் வேல்முருகன் (35), பேத்தி திரிஷா (12) ஆகியோர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்னைக்கு சென்றுவிட்டு, திரும்பி மதுராந்தகம் வழியாக காரில் வந்தனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூர் அருகே வந்தபோது கார் நிலை தடுமாறி எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில், பத்மாவதி, மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே இறந்தனர். சிறுமி திரிஷா (12) பலத்த காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மேல்மருவத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.