அத்திவரதர் பெருவிழாவையொட்டி தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ள இடங்களை ஆட்சியர் பா.பொன்னையா வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
அத்திவரதர் பெருவிழா வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
இதையொட்டி, ரூ.13 கோடி செலவில் பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் நகர எல்லையில் உள்ள ஓரிக்கை, ஒலிமுகமதுபேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் தங்களது கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தும் இடங்களாக, பச்சையப்பன் கல்லூரி வளாகம், திருவீதிபள்ளம், லாலா தோட்டம், ஒளிமுகமதுபேட்டை ஆகிய 4 இடங்கள் தேர்வாகியுள்ளன. இந்த இடங்களை ஆட்சியர் பா.பொன்னையா வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
அப்போது, வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து பொதுமக்கள் கோயிலுக்குச் செல்ல மினிபேருந்து வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.
தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தரவேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும், சுகாதார முகாம்களை அமைக்க வேண்டும், தற்காலிக நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என உரிய துறை அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளர் ராஜசேகர், நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநர் கருணாநிதி, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர்(பொ) மகேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் தியாகராஜன், தலைமை நில அளவை அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.