ரூ.6 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பைகளை காஞ்சிபுரம் நகராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் ரெட்டிப்பேட்டை பகுதியில் காத்தலிங்கம் (55) என்பவருக்குச் சொந்தமான கிடங்கு உள்ளது. இக்கிடங்கில் அரசு உத்தரவை மீறி நெகிழிப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நகராட்சி நகர் நல அலுவலர் முத்து தலைமையில் 10 பேர் கொண்ட ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் அங்கிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ரூ.6 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பைகள் அனைத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்தக் கிடங்குக்கு சீல் வைத்து நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.