மறைமலைநகரில் மின் இணைப்பு வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மறைமலைநகர் தொழிற்பேட்டையில் வெங்கடேசன் என்பவர் சிறு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதன் அருகில் இரண்டு கிடங்குகளை புதிதாகக் கட்டியுள்ளார். அந்த கிடங்குகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக மறைமலைநகர் மின்வாரிய அலுவலகத்தில் வெங்கடேசன் கடந்த மே மாதம் விண்ணப்பித்துள்ளார்.
மின் இணைப்பு வழங்குவதற்கு உதவிப் பொறியாளர் சிவராஜ் (53) என்பவர் ரூ.43 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு வெங்கடேசன் மறுத்துள்ளார். அதன் பின்னர் சிவராஜ் ரூ.30 ஆயிரம் கேட்டுள்ளார். இதுகுறித்து வெங்கடேசன், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சிவபாதசேகரன் தலைமையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மறைமலைநகர் மின்வாரிய அலுவலகத்துக்கு வந்தனர்.
அப்போது, மின்வாரிய உதவிப் பொறியாளர் சிவராஜிடம் ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூ.30 ஆயிரத்தை வெங்கடேசன் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சிவராஜை கையும் களவுமாகப் பிடித்தனர். தொடர்ந்து, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிவராஜை ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.