காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம் மதுராந்தகம் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் போட்டியிடுகிறார். அவரை அறிமுகப்படுத்தி, கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்களின் கூட்டம் மதுராந்தத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலரும், உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏவுமான க.சுந்தர் தலைமை வகித்தார். மதுராந்தகம் நகர திமுக செயலர் கே.குமார் வரவேற்றார்.
எம்எல்ஏ-க்கள் புகழேந்தி (மதுராந்தகம்), எழிலரசன் (காஞ்சிபுரம்), மதிமுக துணை பொதுச் செயலர் மல்லை சி.இ.சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சூ.க.ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில்
அமமுக வேட்பாளர்கள்...
காஞ்சிபுரம் மாவட்ட மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் மற்றும் திருப்போரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியச் செயலர் கஜா என்ற கஜேந்திரன் தலைமை வகித்து தலைமையுரையாற்றி வரவேற்றார். மறைமலைநகர் நகர செயலர் ஆர்.கே. சரவணன், கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயலர் ராஜதேவன், சிறுபான்மைப் பிரிவு ஒன்றியச் செயலர்கள் லத்தூர் பாரதிபாபு, திருக்கழுகுன்றம் ஒன்றியச் செயலர் களத்தூர் சுந்தரம், காட்டாங்கொளத்தூர் அப்துல் நபீல், ஜி.கே.பாபு, முன்னாள் எம்எல்ஏ வாசுதேவன், மாவட்ட மகளிரணிச் செயலர் எஸ்தர் தேவகிருபை, வழக்குரைஞர் சீனிவாசன், நகர செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் முட்டுக்காடு முனுசாமி மற்றும் திருப்போரூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எம்.கோதண்டபாணி ஆகியோரை முன்னாள் அமைச்சரும் கட்சியின் தேர்தல் பிரிவுச் செயலருமான செந்தமிழன் அறிமுகப்படுத்திப் பேசினார்.
செங்கல்பட்டு நகர செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.