திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் திருஞானசம்பந்தர் இசைவிழா நடைபெற்றது.
பட்சி தீர்த்தம், வேதமலை என அழைக்கப்படும் திருக்கழுகுன்றம் திருத்தலத்தில் சைவ சமயக் குரவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரும் இறைவன் வேதகிரீஸ்வரரை வணங்கி இறையருள் பெற்றுள்ளனர்.
இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் திருஞானசம்பந்தர் இசைவிழா இந்து சமய அறநிலையத் துறை மூலம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வைகாசி மாதம் மூல நட்சத்திர திருநாளான செவ்வாய்க்கிழமை தாழக்கோயில் சர்வ வாத்திய மண்டபத்தில் ஆளுடைய பிள்ளை திருஞான சம்பந்தருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து திருஞானசம்பந்தர் இசைவிழாவில், சிறப்பு நாகஸ்வர நிகழ்ச்சியும், ஓதுவார் சொக்கலிங்கம் குழுவினரின் தேவார இன்னிசையும், திருஞானசம்பந்தம் என்ற தலைப்பில் நத்திவரம் எம்.குமாரின் ஆன்மிக சொற்பொழிவும், குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதில் சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் என்.தனபால் கலந்துகொண்டு, நாகஸ்வரக் குழுவினர், இசைக் குழுவினர், ஆன்மிக சொற்பொழிவாளர், பரதநாட்டியம் ஆடிய மாணவியருக்கு பரிசுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலர்கள் திருவிடந்தை வெங்கடேசன், ஸ்ரீபெரும்புதூர் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் எம்.சக்திவேல், செயல் அலுவலர் ஆ.குமரன், கோயில் மேலாளர் விஜயன், திருக்கோயில் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள் மற்றும் திருக்கழுகுன்றம் நகர மக்கள் செய்திருந்தனர்.