உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் இலவசமாகக் கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
உலக நாடுகளின் கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை விளக்கும் பாரம்பரிய புராதனச் சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரித்து வரும் தொல்லியல் துறை ஆண்டுதோறும் நவ. 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பாரம்பரிய வாரமாக இந்தியா முழுவதிலும் கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில் மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை முதல் 25-ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு கடற்கைா கோயில் வளாகத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் உலக பாரம்பரிய விழா கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைப்பாறை உள்ளிட்ட புராதனச் சின்னங்களை செவ்வாய்க்கிழமை (நவ. 19) ஒருநாள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி இலவசமாகக் கண்டு களிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.