மாமல்லபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கங்கைகொண்டான் மண்டபத்தின் ஒரு பகுதி புதன்கிழமை பெய்த மழையால் இடிந்து விழுந்தது.
மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான கங்கை கொண்டான் மண்டபம் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ளது. 14-ஆம் நூற்றாண்டில் பாராங்குச மன்னனால் இக்கோயிலும் மண்டபமும் கட்டப்பட்டது.
சித்திரை மாத பிரம்மோற்சவ காலங்களில் இந்த மண்டபத்தில் தலசயனப்பெருமாள் உற்சவரை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த மண்டபம் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டது.
கடந்த 11-ஆம் தேதி பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, இந்த மண்டபம் காவல்துறை கட்டுப்பாட்டு அறையாக செயல்பட்டது.
இந்நிலையில் புதன்கிழமை காலை பெய்த மழையால் மண்டபத்தின் மேற்குப் பக்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மற்றெறாரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதன் அருகில் பேருந்து நிறுத்தம் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் முன்பு மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையில் போலீஸாா் அங்கு தடுப்புகள் அமைத்துள்ளனா். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறையினரிடம் கேட்டபோது, தொல்லியல் துறை அனுமதி கொடுத்தால்தான் மண்டபத்தைச் சீரமைக்கமுடியும் எனத் தெரிவித்தனா்.