காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 352 வழக்குகளுக்கு சமரசத்தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.6.41கோடி தீர்வுத் தொகையாக வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ.சந்திரன் தலைமை வகித்து மக்கள் நீதிமன்றத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.கயல்விழி, சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி எஸ்.பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்குரைஞர்கள் சங்க தலைவர் ப.கார்த்திகேயன் வரவேற்றார்.
தொடக்க நிகழ்ச்சியாக, திருச்சி அருகே பெரம்பலூர் மாவட்டத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த, சுங்குவார்சத்திரத்தைச் சேர்ந்த கஜாமுத்து என்ற பெண்ணின் குழந்தைகள் 3 பேருக்கு தலா ரூ.3.18 லட்சம் வீதம் மொத்தம் 9.54,000 இழப்பீட்டுத் தொகையினை காசோலையாக மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ.சந்திரனும், கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.கயல்விழியும் வழங்கினர். கூடுதல் சார்பு நீதிபதி கே.சுதாராணி தலைமையில் நடைபெற்ற 2-ஆவது அமர்வில் காசோலை மோசடி வழக்கு விசாரணைகள் நடந்தன.
முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.திருமால் தலைமையில் நடந்த 3- ஆவது அமர்வில் வங்கி தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சமரசம் காணப்பட்டது.
மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் சனிக்கிழமை ஒரே நாளில் 352 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு ரூ.6 கோடியே 41 லட்சத்து 8 ஆயிரத்து 916 தீர்வுத் தொகையாக வழங்கப்பட்டது.
இதில் நீதிபதிகள் செந்தில்குமார், சரவணகுமார், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்கள் தி.பார்த்தசாரதி, ஜி.ரவிக்குமார், நீதிமன்றப் பணியாளர்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் மேலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வழக்குரைஞர் சங்கச் செயலர் எஸ்.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.