காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகேயுள்ள பெருநகர் கிளை நூலகத்தின் பின்புறம் கடந்த ஓராண்டாக மூடப்படாத ஆழ்துளைக் கிணறு (படம்) இருந்து வருவதாகவும்,இதனை உடனடியாக சரி செய்யுமாறும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருநகர் கிளை நூலகத்தின் பின்புறம் ஆழ்துளைக் கிணறு போடப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆழ்துளைக் கிணற்றில் நீர் இறைக்கப் பயன்படுத்தி வந்த மோட்டார் பழுதானது.
இதை சரி செய்ய மோட்டாரை எடுத்து சென்றவர்கள் ஓராண்டாகியும் பொருத்தப்படவில்லை.
சரியாக மூடப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நூலகத்தின் எதிர்புறத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியும்,பின்புறத்தில் சத்துணவுக் கூடமும் உள்ளது.இவையிரண்டுக்கும் வரும் மாணவ,மாணவியர்கள் இக்கிணற்றில் தவறி விழுந்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்து வருகிறது.
எனவே மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணற்றை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெருநகர் கிளை நூலகத்துக்கு வரும் வாசகர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.