மதுராந்தகத்தை அடுத்த கோட்டை பூஞ்சை வன துர்க்கை சித்தர் பீடத்தில் 34-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
ஆடிப்பூர பெருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை மங்கல இசை நிகழ்ச்சி, சித்தர் பீட நிர்வாகிகளுக்கு காப்பு கட்டுதல், 108 பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
பால்குடம் ஏந்தி வந்த பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். விரதம் இருந்து வந்த பக்தர்கள் அலகு, வேல்குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர். நண்பகல் 11.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீபாராதணை நடைபெற்றது. மாலை 4.30 }க்கு ராகு கால 108 திருவிளக்கு பூஜையை சித்தர் பீடத்தின் வனதுர்க்கை சித்தர் சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ஆடிப்பூர மகா வேள்வி, 108 கலச, திருவிளக்கு பூஜை, குங்கும அர்ச்சனைகள் நடைபெற்றன. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர்களும், கிராம மக்களும் செய்திருந்தனர்.
சதுக்கம் கிராமத்தில்...
காஞ்சிபுரம், ஆக. 4: உத்தரமேரூர் அருகே சதுக்கம் கிராமத்தில் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பாலாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் பாலாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடந்தன.
விரதமிருந்த பக்தர்கள் முத்துப் பிள்ளையார் கோயிலிலிருந்து 108 பால் குடங்களுடன் தாரை, தப்பட்டை, மேள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். பின்னர், துர்க்கையம்மனுக்கு பக்தர்களே பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். பிற்பகல் பொங்கல் வைத்துப் படையல் நடைபெற்றது.
மாலையில் கோ பூஜையும், இரவு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.