காலவாக்கம் சின்னம்மன் கோயிலில் 21-ஆம் ஆண்டு ஆடித்திருவிழா தெப்பல் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
திருப்போரூரை அடுத்த காலவாக்கம் சின்னம்மன் கோயில் ஆடித் திருவிழா ஊரணிப் பொங்கல், கூழ்வார்த்தல், தீமிதி விழா, அம்மன் ஊர்வலம், தெப்பல் உற்சவம் என 4 நாள்கள் விழா நடைபெற்றது.
விவசாய பூமி செழிக்கவும், மழை வேண்டியும் காலவாக்கம் கிராம மக்களால் கொண்டாடப்படும் ஆடித்திருவிழா ஆக. 2-ஆம்தேதி வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, அங்காளம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாகச் சென்று சின்னஅம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபராதனையும் செய்யப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சனிக்கிழமை நடைபெற்ற ஊரணிப்பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கரக ஊர்வலம், கூழ்வார்த்தல், கும்பமிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முக்கிய திருவிழாவான தீமிதி விழா திங்கள்கிழமை மாலையும், இரவு தெப்பல் விழா உற்சவமும் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில், அம்மன் அலங்கரிக்கப்பட்டு தெப்பலில் அமர வைத்து, தெப்பக்குளத்தை மூன்றுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பல் வடத்தை பக்தர்கள் இழுத்துச் சென்று, கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
அப்போது பலத்த மழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து மழையில் நனைந்தபடியே அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், காலவாக்கம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.