காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் குடும்ப அட்டைதாரர்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காணும் வகையில், குறை தீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் குடும்ப அட்டைதார்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காணும் பொருட்டு மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஆக. 10) நடைபெறுகிறது.
இச்சிறப்பு முகாமில் குடும்ப அட்டை தொடர்புடைய குறைகள் பரிசீலிக்கப்படும். குடும்ப அட்டைகளில் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் இணைத்தல் தொடர்பான பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும்.
காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள சின்னய்யன்குளம், மாத்தூர், அரும்புலியூர், நந்திவரம், பி.வி.களத்தூர், மானாமதி, வெளியம்பாக்கம், இரணியசித்தி, அளவூர் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். கிராம மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.