மதுராந்தகத்தை அடுத்த குருகுலம் நாகாத்தம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கிரகம் ஏந்தல், 108 பால்குட ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகாத்தம்மன் கோயிலில் ஆடி மாத 4-ஆவது வார செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதிகாலை மங்கல இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. நாகாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
நண்பகல் 12 மணிக்கு மாம்பாக்கம் ஏரிக்கரையில் இருந்து பூங்கரகம் ஏந்தி கொண்டு, 108 பெண்கள் பால்குடங்களைச் சுமந்தவாறு ஊர்வலமாக சென்றனர். முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளம் முழங்க கோயில் சந்நிதியை வந்தடைந்தனர். பின்னர் நாகாத்தம்மன் சிலைக்கு பெண்கள், சுமந்து வந்த பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதைத்தொடர்ந்து, ஊரணி பொங்கல் வைத்து படையலிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.