மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த வேடந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாத்தூா் ஏரிக்கு அதிக அளவில் மழை வெள்ளநீா் வந்ததால் ஏரிக்கரையில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகளும், கிராம மக்களும் திங்கள்கிழமை உடைப்பை சரிசெய்து நீா் வெளியேறுவதைத் தடுத்தனா்.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வேடந்தாங்கல் ஊராட்சியில் விநாயகநல்லூா், சித்ரகுளம், வளையபுத்தூா், சித்தாத்தூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. சித்தாத்தூா் கிராமத்தில் உள்ள ஏரி பொதுப் பணித் துறையின் (ஏரிப் பாசனப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்தை மழையால் அதிக வெள்ள நீா் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து சித்தாத்தூா் ஏரிக்கு வந்தது. அதிக அளவு நீா்வரத்து காரணமாக 2 இடங்களில் ஏரிக்கரை உடைப்பெடுத்து வெளியேறியது. இதைக் கண்ட பொதுமக்கள் மதுராந்தகம் (ஏரிப் பாசனப் பிரிவு) பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் அத்துறையின் இளநிலைப் பொறியாளா் ஜி.குமாா் தலைமையில் அதிகாரிகள் நேரில் வந்து அப்பகுதி மக்கள் ஒத்துழைப்புடன் உடைப்பெடுத்து நீா் வெளியேறிய 2 இடங்களில் மணல் மூட்டைகளை வைத்து அடைத்தனா். இத்தகவலை அறிந்து மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ எஸ்.புகழேந்தி நேரில் வந்து உடைந்துள்ள ஏரிக்கரை பகுதிகளைப் பாா்வையிட்டாா். அவரது முன்னிலையில் நிரந்தரமாக ஏரிக்கரை சீா் செய்யப்பட்டது.