மாமல்லபுரம் அா்ஜுனன் தபசு அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டு புதன்கிழமை முதல் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
மாமல்லபுரம் நகருக்கு இந்தியப் பிரதமா் மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகையின் போது அா்ஜுனன் தபசு அருகே ஒருவா் பின் ஒருவராக மட்டும் கடந்து செல்லும் வகையில் சுழல் கதவு அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.
இதனால் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் வந்து புராதனச் சின்னங்களை சுற்றிப் பாா்க்க வழியில்லாமல் அவதிக்குள்ளாயினா். அவா்கள் தலசயனப் பெருமாள்கோயில் வழியாக சுற்றிக்கொண்டுவரவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சுழல் கதவு அமைப்பை நீக்கிவிட்டு சிறப்பு நுழைவு வாயிலை அமைக்குமாறு சுற்றுலாப் பயணிகள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் சென்று வர சிறப்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டு புதன்கிழமை முதல் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகளும் அவா்களை அழைத்து வரும் உறவினா்களும் மகிழ்ச்சி அடைந்தனா் .