மாணவர்கள் தங்கள் திறமைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரமேரூரில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆட்சியர் பா.பொன்னையா கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், உத்தரமேரூரில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை அறிவியல் கல்லூரியில் தொழில்நெறி கண்காட்சி, கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது:
தற்போது உள்ள கிராம சூழ்நிலைகளில் கல்வி, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு பெறுவதில் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இணையதள சேவைப் பயன்பாட்டை எல்லோரும் பெற வாய்ப்பு உள்ளது. அதைப் பயன்படுத்தி வாழ்க்கைக்குத் தேவையான தொழிலை வளப்படுத்திக் கொள்ளலாம். வசதிகள் என்பது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும், அவ்வாறாகவே பயன்படுத்தப்பட வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு வேலைவாய்ப்பின் முக்கிய அம்சத்தை உணர்ந்து கல்வி பயில வேண்டும். படித்த பின் வேலை பெறுவதில் முனைப்பு காட்ட வேண்டும். கல்லூரிக்குப் பின் வெளியுலகம் வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மாணவர்கள் அனைவருக்கும் திறமைகள் உள்ளன, அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து, கருத்தரங்கில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினார்.
தொடர்ந்து, சார் ஆட்சியர் சரவணன், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் மேஜர்.சி.ரூபா சுப்புலட்சுமி உள்ளிட்டோர் மாணவர்களின் எதிர்கால மேம்பாடு குறித்துப் பேசினர்.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் க.சு.மீனா தலைமை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஆர்.அருணகிரி வரவேற்றார். நிறைவாக, உதவி பேராசிரியர் சாந்தி, நன்றி கூறினார். இதில், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.