சபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்த கேரள அரசைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட இந்து முன்னணியினர் செங்கல்பட்டில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலை ஆகம விதிமுறைகளையும், புனிதத் தன்மையையும் கொச்சைப்படுத்தும் வகையில், 50 வயதுக்கு உட்பட்ட சில பெண்களை ஐயப்பன் கோயிலில் அனுமதித்த கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இனி இவ்வாறு ஐயப்பன் கோயிலின் புனிதத் தன்மையையும், ஆகம விதியையும் சீரழிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கேரள கம்யூனிஸ்ட் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சி மீது மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர் அன்னைராஜ் முன்னிலையில் செங்கல்பட்டு நகர தலைவர் ஏழுமலை, துணைத் தலைவர் பிரகலாதன், பொதுச் செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கேரள அரசையும், அம்மாநில முதல்வரையும் கண்டித்து கோஷமிட்டனர்.