காஞ்சிபுரத்தில் பஞ்சு மெத்தை தயாரிக்கும் இடத்தில் புதன்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் பொருள்கள் எரிந்து நாசமாயின.
காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியில் வசித்து வருபவர் கமலக்கண்ணன். இவரும், இவரது குடும்பத்தினரும், கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதியில் பஞ்சு மெத்தை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, புதன்கிழமை மதியம் பஞ்சு வைத்துள்ள இடத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில், தீ மளமளவென பஞ்சு வைத்துள்ள இடங்களில் பரவியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீடு முழுவதும் தீ பரவியது. தீயணைப்பு வாகனங்கள் உள்ளே வருவதற்கு வழி இல்லாத காரணத்தால் சிறிய வகை தீயணைப்பு வாகனத்தை கொண்டுவந்து, தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். எனினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்பு வீரர்களுடன் இணைந்த பொதுமக்கள் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். இதில், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் இல்லை. இத் தீ விபத்தில் சில ஆயிரக்கணக்கான பஞ்சுப் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து, சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.