காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட மலைப்பட்டு கிராமத்தில் கடந்த ஓராண்டாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மலைப்பட்டு கிராமத்தில் 2017-18-ஆம் நிதியாண்டில் ஒன்றிய பொதுநிதி மூலம் மாகான்யம் செல்லும் சாலையில் ரூ. 14.40 லட்சம் செலவில் கடந்த ஓராண்டுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
பணி நிறைவடைந்து ஓராண்டைக் கடந்தும் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் மலைப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட திருமலை நாயக்கர் தெரு, ராமதாஸ் தெரு, விநாயகர் கோயில் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து கடந்த வியாழக்கிழமை தினமணி நாளிதழில் மலைப்பட்டு கிராமத்தில் பயன்பாட்டிக்கு வராத நீர்த் தேக்கத் தொட்டி என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தேவையான குழாய்களை ஊரக வளர்ச்சித் துறையினர் அமைத்து வெள்ளிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.