ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுராபழஞ்சூர் பகுதியில் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய்த் துறையினர் சனிக்கிழமை மீட்டனர்.
மேவளூர்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட மதுராபழஞ்சூர் பகுதியில் தனியார் உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளி வளாகத்தின் அருகில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, பள்ளிக்கான விளையாட்டு மைதானம் மற்றும் பார்வையாளர் மாடம் ஆகியவை கட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் காஞ்சனமாலா தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர்கள் பூபாலன், வெங்கடேசன், தலைமை நில அளவையாளர் கிருஷ்ணகுமார், தண்டலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது, அரசு இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினர் முன்னிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.