குறை மாதத்தில் 590 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைக்கு சவீதா மருத்துவமனையில் 102 நாள்கள் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அக்குழந்தை தற்போது 2 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சவீதா மருத்துவமனையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 6 மாத கர்ப்பிணி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர்.
குழந்தை வெறும் 590 கிராம் எடை மட்டுமே இருந்ததால், கடந்த 102 நாள்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் குழந்தை தற்போது 2 கிலோ எடை அதிகரித்ததோடு ஆரோக்கியமாக உள்ளது.
இதுகுறித்து, சவீதா கல்வி நிறுவனங்களின் தலைவர் வீரய்யன், இயக்குநர் சவீதா ராஜேஷ், மருத்துவர் குமுதா ஆகியோர் கூறியது:
குறை மாதத்தில் 590 கிராம் எடையில் குழந்தை பிறந்ததால், குழந்தையின் நுரையீரலுக்கு நேரடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ரத்த சோகை இருந்ததால் ரத்தம் ஏற்றப்பட்டதோடு, கண் பார்வை குறைபாடும் இருந்ததால் அதற்கு லேசர் மூலம் கிசிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 102 நாள்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் தற்போது குழந்தை முழு ஆரோக்கியத்துடன் உள்ளது என்றனர்.
குழந்தையின் தாய் கூறியது: சென்னை, தாம்பரத்தில் வசிக்கிறோம். கணவர் கட்டுமானத் தொழிலாளியாக உள்ளார். முதலில் பிறந்த ஆண்குழந்தைக்கு 6 வயதாகிறது. இரண்டாவதாக கருவுற்றபோது எனக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வயிற்றில் 6 மாதக் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து என்னையும், பெண் குழந்தையையும் காப்பாற்றியுள்ளனர் என்றார்.