பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பொறியியல் கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
சென்னை நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவி கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தமியுன் ராஜு என்பவரின் மகன் ஆல்பர்ட் (21) அந்த மாணவியை பலாத்காரம் செய்தார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சென்னை புனித தோமையார் மலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆல்பர்ட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின் ஆல்பர்ட் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இவ்வழக்கில் நீதிபதி வேல்முருகன் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். சிறுமியை பாலியல் ஆல்பர்ட் பலாத்காரத்துக்கு ஆளாக்கியது நிரூபிக்கப்படுள்ளதால் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதத்தைக் கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்தார். இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக சீதாலட்சுமி ஆஜராகி வாதாடினார்.