திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பொன்விளைந்த களத்தூரில் குடிநீர் விநியோகம் செய்யக் கோரி கிராமப் பெண்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்விளைந்த களத்தூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அந்த கிராமத்துப் பெண்கள் காலிக்குடங்களுடன் திருக்கழுகுன்றம்-வல்லிபுரம் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த திருக்கழுகுன்றம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா, மேலாளர் குமார், திருக்கழுகுன்றம் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உடனடியாக குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் கிராமத்தினர் கலைந்துசென்றனர்.