உத்தரமேரூர் அருகே திரிசூலக்காளியம்மன் கோயில் தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
திருப்புலிவனம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரிசூலக்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 35-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா சனிக்கிழமை காலை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்து கோயிலைச் சுற்றிவந்து அம்மனை வழிபட்டனர். கோயில் வளாகத்தில் ஊரணிப் பொங்கலிட்டு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. மாலையில் விரதமிருந்த பக்தர்கள் திருப்புலிவனம் குளக்கரையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயில் வளாகத்தில் மூட்டப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீமிதித்து அம்மனை வழிபட்டனர்.
பின்னர், ஆன்மிகச் சொற்பொழிவு, பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திரிசூலக்காளியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர், கிராமத்தினர் செய்திருந்தனர்.