திருப்போரூரை அடுத்த சிறுசேரி கிராமத்தில் உள்ள ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் சேற்றில் புதைந்து உயிரிழந்தனர்.
தாழம்பூர் சிறுசேரி கிராமத்தில் ஏரி மராமரத்துப் பணி நடந்து வருகிறது. ஏரியின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டி அதில் தண்ணீரை தேக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால், நீர் நிரம்பி ஏரியில் இருந்த பள்ளம் மறைந்து தண்ணீர் மட்டும் காணப்பட்டது.
இதை அறியாத அப்பகுதியைச் சேர்ந்த டேவிட் மகன் மில்லர் திலீபன் (10), ராஜன் மகன் மோகன்ராஜ் (15) மற்றும் 4 சிறுவர்கள் சிறுசேரி ஏரியில் குளிக்கச் சென்றனர். மில்லர் திலீபன், மோகன்ராஜ் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் சேற்றில் புதைந்து உயிரிழந்தனர். இதுகுறித்து தாழம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.