செங்கல்பட்டை அடுத்த மலாலிநத்தம் அருகே திங்கள்கிழமை மாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியத்தில் ஒருபெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (35). அவர் மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் சிற்பக் கலைக் கூடம் நடத்திவருகிறார். அவரது மனைவி செந்தமிழ்ச் செல்வி (28). இந்த தம்பதியர் திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டில் உள்ள தங்கள் உறவினர் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அதேபோல், செங்கல்பட்டு ராமகிருஷ்ணா நகரில் வசிந்து வந்த லூயிஸ் (51), திருப்போரூர் மானாமதி தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார். அவர் திங்கள்கிழமை மாலையில் பணி முடிந்து செங்கல்பட்டில் உள்ள வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இந்த 2 இருசக்கர வாகனங்களும் வந்தபோது, செங்கல்பட்டில் இருந்து திருக்கழுகுன்றம் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது.
அந்த கார் இந்த இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதில், அவற்றில் பயணித்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டனர். அங்கு முருகனின் மனைவி செந்தமிழ்ச்செல்வியும், போஸ்ட் மாஸ்டர் லூயிஸும் இறந்தனர். முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.