மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் ஆனி மாத பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளித் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கருட சேவை, பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.
விழாவின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலையில் உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு வாண வேடிக்கை மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன், மேளதாளம் முழங்க, புஷ்பக விமானம் எனப்படும் வெள்ளித் தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோதண்டராமர் அமர்த்தப்பட்டார். இதைத் தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோதண்ட ராமர் எழுந்தருளி வீதி உலா வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி, எம்.பி.செல்வம், முன்னாள் நகரமன்றத் தலைவர் மலர்விழிகுமார், இந்து சமய அறநிலையத் துறை வேலூர் இணை ஆணையர் இரா.செந்தில்வேலவன் ஆகியோர் தேரின் வடத்தை இழுத்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளனர்.
விழா ஏற்பாடுகளை வேலூர் அறநிலையத் துறை இணை ஆணையர் தலைமையில் செயல் அலுவலர்கள் சோ.செந்தில்குமார், கே.டி.சரவணன் மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.