செங்கல்பட்டில் உள்ள ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் 700 மாணவர்களுக்கு சேர்க்கை முடிந்துள்ளதாக கல்லூரி முதல்வர் சிதம்பர விநாயகம் தெரிவித்தார்.
பிளஸ் 2 முடிந்த மாணவ, மாணவிகள் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு பட்டப் படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்தனர். இதில் நேர்முகத் தேர்வு முடிந்து, கல்லூரியில் மாணவர் சேர்க்கை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றது வந்தது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் சிதம்பர விநாயகம் கூறியது:
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 4 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. அதன்படி 12 பாடப் பிரிவுகளில் 700 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
அனைத்துப் பிரிவுகளிலும் சேர்க்கை முடிந்துவிட்ட நிலையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடங்களில் 32 இடங்கள் காலியாக உள்ளன. இஸ்லாமியருக்கான 11 இடங்களும், அருந்ததியருக்கான ஒதுக்கீட்டில் 4 இடங்களும், எஸ்டி பிரிவில் ஓரிடமும் இன்னும் காலியாக உள்ளன.
மேலும் தமிழக அரசு இந்த ஆண்டு அரசு கலைக் கல்லூரிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 100 மாணவ, மாணவிகளைச் சேர்க்கலாம். இதற்கான சேர்க்கை 18-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றார் அவர்.