தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசைக் கண்டித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவர் எஸ் .யுவராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செயலர் ஐ.காதர் மைதீன், பொருளாளர் ஜி.அகத்தியன், மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசியது:
ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி, அது சிறப்பாகச் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் செயற்கை மணல் உற்பத்தி செய்யும் ஆலைகள் தங்களது சொந்த லாரிகள் மூலமாகவே அதை விற்பனை செய்கின்றன. இதனால் காலங்காலமாக மணல் விற்பனையில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
இதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஓராண்டுக்கும் மேலாக முயற்சி செய்தும், நமது கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வரைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை.
மணல் லாரி வாகனங்களுக்கு மூன்றாம் நகர் விபத்துக் காப்பீட்டுத் தொகை ஆண்டுதோறும் 30 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.
இதனால் நமது வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ரூ. 4,000 முதல் ரூ.7,000 வரை காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே தொழிலில் நஷ்டம் அடைந்துள்ள நம்மால் வாகன காப்பீட்டுத் தொகையைக் கட்ட முடியாத நிலையில் இருக்கிறோம்.
சென்னையைச் சுற்றியுள்ள மதுரவாயல், பரனூர், ஆத்தூர் போன்ற காலாவதியான சுங்க வரி வசூல் மையங்களை மூடாமல் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆண்டுதோறும் 10 சதவீதம் சுங்க வரிக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இவற்றைக் கண்டிக்கிறோம். நமது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று நிர்வாகிகள் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.