மதுராந்தகத்தை அடுத்த அணைக்கட்டு கிராமத்தில் விவசாயி வீட்டில் இருந்து 2 ஆடுகளைத் திருடிய இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
அணைக்கட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (45). விவசாயியான அவர் தன் வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார். அவரது வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் 2 இளைஞர்கள் வந்தனர். அவர்கள் விநாயகம் வளர்த்து வந்த ஆடுகளை திருடிக் கொண்டு வேகமாகச் செல்வதைக் கண்டு அவர் கூச்சலிட்டார்.
அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் அவர்களை அணைக்கட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (20), சதீஷ் (22) என்பது தெரிய வந்தது. அவர்கள் இப்பகுதியில் உள்ள ஆடுகளை இருசக்கர வாகனம் மூலம் கடத்திச் சென்று விற்று வந்ததை ஒப்புக் கொண்டனர். இது குறித்து செய்யூர் காவல் ஆய்வாளர் நாகலிங்கம் வழக்குப்பதிவு செய்து, இரு இளைஞர்களையும் கைது செய்தார்.