தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அலுவலக வாசலில் கோலங்கள் வரைந்து, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேர்தலில் பொதுமக்கள்100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை, நகராட்சி, ஊராட்சி என அனைத்து நிர்வாகத்தினரும் பல்வேறு விதமான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் அலுவலக வாசலில் அனைவரும் அவசியம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோலங்கள் வரைந்தனர். அதில், 100 சதவீதம் வாக்களிப்போம், நமது வாக்குரிமை-நமது எதிர்காலம், உங்கள் எதிர்காலம் உங்கள் விரலில் உள்ளிட்ட வாசகங்களை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரூராட்சிக்கு வரி செலுத்த, சான்றிதழ்கள் பெற வந்திருந்த பொதுமக்களுக்கு இதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.