சங்கரா பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்பக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக் கழக வளாகத்தில் 5-ஆவது தொழில் நுட்பக் கண்காட்சியை துணை வேந்தர் விஷ்ணு போத்தி, பதிவாளர் சீனுவாசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், முனைவர் மனோகரன் சிறப்புரையாற்றினார். இக்கண்காட்சியில், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்புக்காக சப்தம் மூலம் எச்சரிக்கை செய்யக்கூடிய கருவி, திட மற்றும் திரவக் கழிவுகளைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், வாகனப் புகையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரம் போன்றவை சிறந்த தொழில் நுட்ப மாதிரிகளாகத் தேர்வு செய்யப்பட்டு உரிய மாணவர்களுக்கு பரிசாக மொத்தம் ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில், பல்கலைக்கழக டீன் பாலாஜி, பேராசிரியர்கள் ரத்தின குமார், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.