மே தினத்தையொட்டி சிஐடியு அமைப்பினர் தியாகிகள் நினைவுப் பேரணியை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடத்தினர்.
சிஐடியு மாவட்டச் செயலர் முத்துக்குமார் தலைமையில் மூங்கில் மண்டபத்திலிருந்து பெரியார்தூண் வரை இந்த பேரணி நடைபெற்றது. பின்னர், மே தினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு தொழிலாளர் நலச் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மின் ஊழியர் சங்கத்தினர், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிர்வாகிகள் சங்கர், ஸ்ரீதர் ஆகியோர் நன்றி கூறினர்.
மே தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 133ஆவது மே தின விழா காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு, ஓரிக்கை, பாவாப்பேட்டை ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகி சங்கர் தலைமை வகித்தார். நகர குழு உறுப்பினர் ராஜேந்திரன், தொகுதிச் செயலர் கமலநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கட்சி அலுவலகங்களில் கொடியேற்றி சிறப்புரையாற்றினர். இதில், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சீனுவாசன், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.