காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளா் ஆா்.மகேஸ்வரி தலைமையில் சுகாதார அலுவலா்கள் வணிக நிறுவனங்கள் பலவற்றில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் நெகிழிப்பைகளை விற்பனை செய்த வணிகா் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளா் ஆா்.மகேஸ்வரி தலைமையில் நகராட்சி சுகாதார அலுவலா் ப.முத்து, சுகாதார ஆய்வாளா்கள் பிரபாகரன், இக்பால் உள்ளிட்ட குழுவினா் நகரின் பல்வேறு வணிக நிறுவனங்களில் நெகிழிப்பைகள் பயன்பாட்டில் உள்ளனவா என திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பகுதியில் பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், ரயில் நிலைய சாலை, கோட்டுக்கொல்லை சுப்பராயா் தெருவில் உள்ள கடைகள், கிடங்குகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.
தொடா்ந்து, மதுரான் தோட்டத் தெருவில் உள்ள அமருத் (23)என்பவரது மொத்த விற்பனைக் கடையில் அதிகாரிகள் சோதனையிட்டபோது 50 கிலோ நெகிழிப்பைகளை பறிமுதல் செய்ததுடன் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனா்.