தூய்மையே சேவை இயக்கத்தினர் துணிப்பை வழங்கல்

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியில் பயணிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியில் பயணிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.
 ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பாக மகளிர்சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர் கலந்துகொண்ட விழிப்புணர்வுப் பேரணி போந்தூர் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
 ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.வசுமதி, ஆர்.வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேரணியை உதவி திட்ட அலுவலர் முரளி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போந்தூர் அரசுப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி போந்தூர் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே முடிவடைந்தது.
 இதையடுத்து தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பாக ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பென்னலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே இருந்த குப்பைகளை தூய்மைக்காவலர்கள் மற்றும் துப்பரவுப் பணியாளர்கள் அகற்றினர். உதவித் திட்ட அலுவலர் முரளி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.வசுமதி, ஆர்.வேல்முருகன் ஆகியோர் சுங்கச்சாவடி வழியாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த பயணிகளிடம் இருந்த ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்ததோடு அவர்களுக்கு துணிப்பைகளை வழங்கினர்.
 இந்த நிகழ்ச்சியில் மண்டல வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் ஏழுமலை, அனுசுயா, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தூய்மை பாரதத் திட்ட ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், ஊராட்சி செயலர்கள் போந்தூர் ரமேஷ், பிள்ளைப்பாக்கம் ராஜு, பென்னலூர் ரமேஷ், கொளத்தூர் சரவணன், தண்டலம் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com