நிலத்தை அளவை செய்ய லஞ்சம் வாங்கியதாக நில அளவையாளர் (சர்வேயர்), அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் விண்ணம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை அளவை செய்து, அதற்கான பட்டா வழங்கக் கோரி ஒரத்தி நிலஅளவையாளர் ராஜகுரு (35)விடம் மனு அளித்திருந்தார்.
நிலத்தை அளந்து, பட்டா போட்டு கொடுக்க வேண்டுமானால் ரூ.35 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றும், பணம் கொடுத்தால் 5 நாட்களுக்குள் உரிய பட்டாவை அளிப்பதாக ராஜகுரு, செல்லப்பனிடம் கூறியுள்ளார்.
அதிக தொகையை தன்னால் தரமுடியாது என்றும், முதலில் ரூ. 23 ஆயிரத்தை கொடுத்து விடுவதாகவும், மீதித்தொகையைப் பட்டா சான்று கொடுக்கும்போது அளிப்பதாகவும் செல்லப்பன், ராஜகுருவிடம் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்லப்பன், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லப்பனிடம் கொடுத்தனுப்பிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஒரத்தி வருவாய் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சிவபாதசேகரன் தலைமையில் புதன்கிழமை மாலை மறைந்திருந்தனர்.
அந்த பணத்தை செல்லப்பன், நில அளவையாளர் ராஜகுருவிடமும், அவரது உதவியாளர் திருப்பதி (30) யிடமும் கொடுக்கும்போது மறைந்திருந்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.