செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழக்கரை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பூபாலன் ஆகிய இருவரும் காயங்களுடன் மது போதையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை வந்தனராம். அங்கிருந்த பெண் மருத்துவர், இருவருக்கும் சிகிச்சை அளித்துவிட்டு அங்கிருந்து செல்ல அறிவுறுத்தினாராம். ஆனால் சந்தோஷ், பூபாலனுடன் வந்த சிலர் இருவரையும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி தகராறில் ஈடுபட்டனர். மேலும், பெண் மருத்துவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து மருத்துவர்கள் தங்களது பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2-அவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பெண் மருத்துவரைத் தாக்கிய சந்தோஷ், பூபாலன் ஆகிய இருவரையும் செங்கல்பட்டு நகர போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.