காஞ்சிபுரத்தில் சி.ஐ.டி.யு. சார்பில் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஒலி முகம்மது பேட்டையில் உள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு. அமைப்பின் மாநிலச் செயலர் டி.ஸ்ரீதர் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் ஆர்.பாபு, பொருளாளர் ஜி.படவேட்டான், மாவட்டப் பொருளாளர் ஜி.வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் இ.முத்துக்குமார் கோரிக்கைகளை விளக்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும், கேங்மேன் பதவியில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், வாரியம் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டபடி தினக்கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.380 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில், கோட்டத் தலைவர் ஆர்.மதியழகன், வட்டார இணைச் செயலர் ஏ.வெங்கடேசன் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.