ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் மற்றும் தண்டலம் பகுதிகளில் சுகாதாரத்துறையினர் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர், நசரத் நகர், காந்தி சாலை, டி.கே.நாயுடு நகர் பகுதிகளிலும், தண்டலம், பிள்ளைப்பாக்கம் ஊராட்சிப் பகுதிகளிலும் ஆறு குழுக்களாகப் பிரிந்து வியாழக்கிழமை சுகாதாரப்பணிகளில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு குழுவிலும், தலா ஒரு மருத்துவர், சுகாதார ஆய்வாளர், செவிலியர், 20 டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள், தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் முகாம்கள் நடத்தி, டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் நிலவேம்பு கஷாயம் வழங்கினர்.
முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்று கூடிய சுகாதாரத்துறையினர் மற்றும் களப்பணியாளர்கள் மருத்துவர் அருண்குமார் தலைமையில் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.